சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.மதிவனன் ஒரு செய்திக்குறிப்பில் கூறியதாவது:
ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் இலவசமாக சேர ஏதுவாக சென்னை பல்கலைக்கழகம் 2010 முதல் சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் (2021-2022) இணைக்கப்பட்ட கல்லூரிகளில் (அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில்) சேர விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ .3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள் மற்றும் குடும்பத்தில் பட்டதாரி படிப்புக்கு வரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இலவச கல்வித் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களும் பிளஸ் 2 முடிவுகள் வெளியான நாளிலிருந்து 2 நாட்களுக்குள் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) பதிவேற்றப்பட வேண்டும். விண்ணப்பம் மற்றும் பிற விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் 28 முதல் (இன்று) காணலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.