ஜம்மு விமானப்படை தளத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
குண்டுகள் அதிகாலை 1:27 மணிக்கு ஜம்மு விமானப்படை தளத்தின் கூரையிலும், அதிகாலை 1:32 மணிக்கு தரையிலும் வெடித்தன.
முதல் குண்டுவெடிப்பில் கட்டிடத்தின் கூரைக்கு சிறிய சேதம் ஏற்பட்டதாகவும், மற்றொரு திறந்தவெளியில் வெடித்ததாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இதனால், இப்பகுதியில் பதற்றம் நிலவியது.
தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
“இந்த தாக்குதல் ஒரு ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. நிறுத்தப்பட்ட விமானத்தை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். இருப்பினும், குண்டுவெடிப்பால் எந்த சேதமும் ஏற்படவில்லை. இரண்டு பணியாளர்கள் மட்டுமே சற்று காயமடைந்தனர்.”
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணை நடந்து வருவதாகவும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.