இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 28 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு 1 முதல் 5 நாள்களுக்குள் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு உயிரிழந்த மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் 25 முதல் 56 வயதுக்குள்பட்டவர்களாகவே உள்ளனர்.
உயிரிழந்த அனைவருக்கும் உடற்கூராய்வு செய்யப்பட்டு, அவர்களது மரணத்துக்கு சரியான காரணம் கண்டறியப்பட்டுளள்தாக தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்டறியும் ஆணையத்தின் ஆலோசகர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.
மேலும், முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இந்த மரணங்கள் நிகழவில்லை என்று தெரிய வந்துள்ளது. ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு உயிரிழந்தவர்களின் மரணங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆய்வில் கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
The post கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் இதுவரை 10 பேர் பலி appeared first on தமிழ் செய்தி.