கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று துவக்கிவைத்தார். மேலும் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை துவக்கிவைத்தனர்.
நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்களப்பணியாளர்கள் 1,65,714 பேர் ஊசி போட்டுக்கொண்டனர். முதன் முதலாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதாரப்பணியாளர் மணீஷ் குமார் என்பவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படவில்லை.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் முதலிடத்தில் அதிகபட்சமாக ஆந்திராவில் 16,963 பேருக்கும், இரண்டாவது இடத்தில் பீகார் மாநிலத்தில் 16,401 பேருக்கும் மூன்றாம் இடத்தில் மஹாராஷ்டிராவில் 15,727 பேருக்கும் போடப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் துவக்கப்பட்டது. முதல்வர் பழனிசாமி , துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் இத்திட்டத்தை துவக்கி வைத்தனர். முதல்நாளான இன்று மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி 2,783 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.