டில்லியில், நிதியமைச்சக வளாகத்தில் உள்ள அச்சகத்தில், பட்ஜெட் அறிக்கைகள் அச்சிடப்படுவது வழக்கம்.பட்ஜெட் ரகசியம் கசிவதை தடுக்க, நுாற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரு வாரங்களுக்கு மேலாக, அச்சகத்தில் தங்கி பணியாற்றுவர்.இந்த ஆண்டு, கொரோனா காரணமாக, பட்ஜெட் அறிக்கை அச்சடிப்பது ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நாடு சுதந்திரம் பெற்ற பின், முதன் முறையாக, காகிதம் இல்லாத பட்ஜெட் ஆவண நடைமுறை நாளை அமலுக்கு வர உள்ளது. நாட்டு மக்களும், மக்கள் பிரதிநிதிகளும், பட்ஜெட் அறிக்கையை, கணினி, ‘லேப்டாப்’ ஆகியவற்றில் பதிவிறக்கி பார்க்கும் வசதி அறிமுகமாக உள்ளது.
இத்துடன், மொபைல் போனில், பட்ஜெட் அறிக்கையை அனைவரும் பதிவிறக்கி பார்க்கவும் வசதி செய்யப்பட்டுஉள்ளது. இதற்கான, மொபைல் போன் செயலியை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிமுகப்படுத்தினார். ‘பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர்’ ஆகியவற்றில், இந்த செயலியை பதிவிறக்கலாம். நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரையை வாசித்து முடித்த பின், அறிக்கையை பதிவிறக்கி பார்க்கலாம்.
இந்த செயலியில், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில், மத்திய பட்ஜெட், மானிய கோரிக்கை, நிதி மசோதா உட்பட, 14 வகையான ஆவணங்களை பதிவிறக்கி பார்க்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த செயலி தவிர, மத்திய பட்ஜெட் வலைதளத்தில் இருந்தும், பட்ஜெட் அறிக்கையை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.
The post நாளை, 2021 – 22ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல்…. ‘மொபைல்போன்’ செயலி அறிமுகம்… நிர்மலா சீதாராமன் appeared first on தமிழ் செய்தி.