தெனாலி படத்துக்குப் பிறகு ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் என்கிற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கைத் தயாரிக்கிறார் பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார். ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படம் தமிழில் கூகுள் குட்டப்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதியவர் வேடத்தில் கே.எஸ். ரவிகுமார் நடிக்கிறார். தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு போன்றோரும் நடிக்கிறார்கள். கே.எஸ். ரவிகுமாரின் உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணன் கூகுள் குட்டப்பனை இயக்குகிறார்கள். இசை – ஜிப்ரான். இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பிப்ரவரி 15 முதல் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் ரஜினியுடன் மீண்டும் இணைவது குறித்து கே.எஸ். ரவிகுமார் பேசியதாவது:
மாதத்துக்கு ஒருமுறையாவது ரஜினி சார் எனக்கு போன் செய்து விடுவார். அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் நானாக போன் செய்ய மாட்டேன். இதனால் என்ன பாஸ் மறந்துட்டீங்களா எனக் கேட்பார். ஆறு மாதத்துக்கு முன்பு, ராணா கதையை மறந்து விட்டேன். ஓரளவுதான் ஞாபகம் உள்ளது. மீண்டும் சொல்லுங்கள் என்றார். ஒருநாள் அவகாசம் கேட்டேன். திரைக்கதை தயாராக உள்ளது. அதை ஒருமுறை பார்த்துவிட்டு என் உதவி இயக்குநர்களுடன் அவருடைய வீட்டுக்குச் சென்று ராணா கதையை ஒரு மணி நேரம் சொன்னேன்.
ப்பா.. என்ன கதை இது, இதில் நடிக்க வேண்டும் என ஆசையாக உள்ளது. ஆனால் அதற்கு உடம்பில் இன்னும் வலு வேண்டும். அது வந்தவுடன் பண்ணலாம் என்றார். அதனால் அந்தக் கதையில் அவர் எப்போது நடிப்பார் எனத் தெரியாது. அவரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். மார்க்கெட்டில் உச்சத்தில் உள்ள நடிகர்கள், எந்த இயக்குநர் படத்தில் நடிப்பது என்பதை அவர்கள்தான் தேர்வு செய்வார்கள். நாம் முடிவெடுக்க முடியாது என்றார்.
The post ராணா கதையில் நடிக்க ஆசையாக உள்ளது…. ரஜினி இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரிடம் தெரிவித்தார் appeared first on தமிழ் செய்தி.