Type Here to Get Search Results !

கொலை வழக்கில் 7 பேர்.... ஆளுநர் தாக்கல் செய்த ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த நடவடிக்கை.... அமைச்சர் சி.வி.சண்முகம்

 


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் உள்ளனர்.  இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யலாம் எனத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முடிவு எடுக்காமல் உள்ளார்.

இதனிடையே, தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு கடந்த ஜன.21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார்’ என்று மத்திய அரசு உறுதியளித்தது.

இதை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் உறுதி செய்தார். இதையடுத்து, பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்குத் தள்ளிவைத்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் ஆளுநர் சார்பில் பதிலளிக்கப்பட்டது. அதில் 7 விடுதலை குறித்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆளுநரின் ஆவணம் கிடைத்த பிறகே இது தொடர்பாக அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறுகையில்;- உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்த ஆவணம் அரசுக்குக் கிடைக்கவில்லை. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் முடிவு பற்றிய ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகளை  அரசு மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.