Type Here to Get Search Results !

இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயல்பட வேண்டும்..... மத்திய அரசு எச்சரிக்கை

 


இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறையை தொடர்ந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியான வதந்திகளை தடுக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு இந்திய அரசின் சார்பில் வலியுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது,  ஆனால் நடவடிக்கை எடுக்க ட்விட்டர் தயங்கி வரும் நிலையில் இந்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் இவ்வாறு எச்சரித்துள்ளார். 

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து தவறான தகவல்கள் சமூகவலைதளத்தில் பரப்பட்டு வருகிறது, குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான்  தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவானவர்கள் வெளிநாடுகளில் இருந்தபடியே வேளாண் சட்டங்கள் குறித்து வதந்திகளை பரப்பும் வகையில் ஹாஸ்டாக்குகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய பிரதமர் மோடி விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது எனவும் ஹாஸ்டாக்குகள் பதிவிடப்பட்டு வருகிறது. இது வடிகட்டிய வதந்தி என்பதுடன், இந்திய இறையாண்மைக்கு எதிரானது, அதுமட்டுமின்றி தேசம் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கையாகும், எனவே இதுபோன்ற கருத்துக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அக்கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சுமார் 1,100 டுவிட்டர் கணக்குகள் அடங்கிய பட்டியலை டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது. 

ஆனால் முதலில் 250 கணக்குகளை முடக்கிய ட்விட்டர் நிறுவனம், பின்னர் அவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என கூறியது கணக்குகளை விடுவித்தது. இது இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசிய, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்தியச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயல்பட வேண்டும், இல்லையெனில் கடுமையான  நடவடிக்கை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவில் சமூக ஊடகங்கள் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு, கட்டுப்பட்டு நடக்க வேண்டும், என அறிவுறுத்தியுள்ளார். மேலும், உங்களுக்கு தேவையான சுதந்திரத்தையும், தனி நபர்களுக்கான சுதந்திரத்தையும் அரசு உறுதி செய்திருக்கிறது, ஆனால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை கவனத்தில் கொள்ளுங்கள், தயவுசெய்து விரோதத்தை பரப்புவதற்கும் தவறான தகவல்களை பரப்புவதற்கும் சமூக ஊடகங்கள் அனுமதிக்கக்கூடாது. 

இந்தியாவில் உள்ள சமூக ஊடகங்கள், அரசியல் அமைப்புகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் போராட்டக்காரர்கள் நுழைந்தபோது ட்விட்டர் நிறுவனம் எப்படி பொறுப்புடன் நடந்து கொண்டதோ, அதேபோன்று டெல்லி செங்கோட்டை விவகாரத்திலும் நடந்து கொண்டிருக்க வேண்டும், ஆனால் டுவிட்டர் நிறுவனம் அப்படி நடந்துகொள்ளவில்லை, இரட்டை நிலைபாடு இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்படாது, அதேநேரத்தில்,  உங்கள் நல்ல பணிகளை நாங்கள்  மதிக்கிறோம், நீங்கள் சுதந்திரமாக தொழில் செய்யலாம்,  அன்னிய முதலீட்டை கொண்டு வரலாம், அதேசமயம் இந்திய சட்டங்களை விதிமுறைகளையும் மதித்தே ஆக வேண்டும், சமூக ஊடகங்களில் தனிப்பட்ட மனிதர்களின் அந்தரங்கங்களை பாதுகாப்பது தொடர்பான புதிய வழிகாட்டு விதிகளை மத்திய அரசு வகுத்து வருகிறது, அது விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.