சசிகலா நாளை மறுநாள் வரும் போது, சென்னையில் பேரணி நடத்த அமமுக திட்டமிட்டுள்ளனர். சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும் பேரணி நடத்தவும் அனுமதி கோரி சென்னை போலீசில் அமமுக நிர்வாகி செந்தமிழன் மனு அளித்தார். இந்நிலையில், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் சி.வி. சண்முகம் மற்றும் அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் டிஜிபி அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்;- தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் சசிகலா, டிடிவி.தினகரன் செயல்படுகின்றனர். டிஜிபி, முப்படை தளபதிகளிடம் மனு கொடுத்தாலும் எங்களை தடுக்க முடியாது என தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க சசிகலா ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார். 100 பேர் மனித வெடிகுண்டாக மாறி தமிழகம் வருவோம் என அமமுகவினர் கூறுகின்றனர்.
சிறையில் இருந்து விடுதலையான சசிகலா சென்னை திரும்புவதில் எந்த ஆட்சேபமும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பையே அவமதிக்கும் வகையில் சசிகலா செயல்படுகிறார். அதிமுகவை கொடியை பயன்படுத்தி டிடிவி.தினகரன் மற்றும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகலா அதிமுகவை உரிமை கோர எந்த உரிமையும் இல்லை என கூறியுள்ளார்.