சசிகலாவுக்கு எதிர்ப்பாக கிளம்பி வரும் முனுசாமி, ஜெயக்குமார், சண்முகம் போன்றவர்களின் கலகக் குரல்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். குறிப்பாக, தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மட்டும் தனக்கு செல்வாக்கு என ஊடகங்களில் வரும் செய்திகளை உடைத்தெரிவது தான் தனது முதல்வேலை என்ற முடிவிற்கு வந்துள்ளார்.
பெங்களூரூவில் இருந்து நேராக புரட்சிதலைவியின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்துவதாக திட்டமிட்டு இருந்தார். ஆனால், பராமரிப்பு பணிகள் காரணமாக ஜெயலலிதா சமாதி மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்திற்கு சென்று தியானம் மேற்கொள்ள இருக்கிறார். அடுத்து தஞ்சாருக்கு சென்று கணவர் நடராஜனின் சமாதியில் மரியாதை செலுத்த இருக்கிறார்.
அடுத்து தனது முதல் அரசியல் பயணத்தை கொங்கு மண்டலத்தில் இருந்து அதிரடியாக ஆரம்பிக்க முடிவெடுத்துவிட்டதாக தகவல். கட்சிக் கொடியை காரில் கட்டினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று கூறிய அமைச்சர் சண்முகத்தின் விழுப்புரம் வழியாக கொங்கு மண்டலத்திற்கு அதிமுக கொடிகட்டி பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
அடுத்து அவர் வைத்துள்ள அதிரடி திட்டம் அனைவருக்கும் கலக்கத்தை ஏற்படுத்த உள்ளது. அதிமுகவில் இருந்து மறைந்த பலரது வீட்டிற்கும் நேரடியாகச் சென்று துக்கம் விசாரிக்க இருக்கிறார். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கும் நேரடியாக சென்று மறைந்த அவரது தாயாரின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் திட்டத்தையும் கையில் வைத்துள்ளார். காரணம், தனது கணவர் நடராஜன் மறைவிற்கு வராத அதிமுக தலைவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி பல அதிரடி திட்டங்களுடன் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை கிளப்ப முடிவெடுத்துள்ளார் சசிகலா.