சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் திரும்பும் சசிகலா, இன்று மாலை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா தனது காரில் அதிமுக கொடியைப் பயன்படுத்துவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கும், அவருடன் இருக்கும் யாருக்கும், அதிமுகவுடன் எந்த தொடர்பும் இல்லை. கட்சியினரைத் தவிர வேறு யாரும் அதிமுக கொடியைப் பயன்படுத்துவது என்பது சட்டவிரோதம் என்று கூறினார்.
சசிகலா திரும்பி வருவதால் ஆளும் கட்சியினருக்கு பதற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அவரது வருகை குறித்து பதற்றமடைய எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. தினகரன்தான் அச்சம் கொள்ள வேண்டும். பல விஷயங்கள் குறித்து சசிகலா எழுப்பும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும் என்று ஜெயக்குமார் பதிலளித்தார்.