தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் சுகாதார வசதியை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் கட்டமாக இரண்டாயிரம் “மினி கிளினிக்குகள்” தொடங்கப்படும் என்று அறிவித்து முதல் கட்டமாக 630 மினி கிளினிக்களை தொடங்கி வைத்தார். மொத்தம் இரண்டாயிரம் மினி கிளினிக்குகளில் 1400 மினி கிளினிக்குகள் கிராமப்புறங்களில் செயல்படுகிறது. இந்த மினி கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்கள் இருப்பார்கள். இங்கு, ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் பரிசோதனை, மகப்பேறு, ஹீமோகுளோபின் பரிசோதனை செய்யலாம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், நாடு முழுவதும் குறிப்பாக கிராமப்புறங்களில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் வரும் 6 வருடங்களில் 64, 180 கோடி மதிப்பீட்டில் “பிரதம மந்திரி சுய சார்பு சுகாதார இந்தியா” திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மத்திய அரசு அறிமுகப்படுத்தப்படவுள்ள திட்டம் ஏற்கனவே தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு கிராமப்புற மக்களின் வசதிக்காக “அம்மா மினி கிளினிக்” திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டதை பின்பற்றி மத்திய அரசு “சுகாதார இந்தியா” திட்டத்தை செயல்படுத்துகிறது. திட்டங்களை செயல்படுத்துவதில் துறை ரீதியாக மத்திய அரசின் பல்வேறு விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் திட்டத்தை பின்பற்றி மத்திய அரசு தனது திட்டத்தை செயல்படுத்துவது, தமிழக அரசு நாட்டில் முன்னொடி மாநிலமாக இருப்பதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.