பாஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் ஏழு மாநகராட்சிகளை வென்றது, மேலும் பல நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் முன்னிலை வகித்துவருகிறது. அதேவேளையில் வேளாண் சட்டங்களின் எதிர்ப்பு காரணமாக பாஜக இத்தேர்தலில் பின்னடைவை சந்தித்துவருவதாக சொல்லப்படுகிறது.
அபோஹர், பதிந்தா, கபுர்தலா, ஹோஷியார்பூர், மோகா, படாலா மற்றும் ஹோஷியார்பூர் ஆகிய ஏழு மாநகராட்சிகளை காங்கிரஸ் வென்றது. முறைகேடுகள் பற்றிய புகார்கள் காரணமாக மொஹாலி மாநகராட்சியில், இரண்டு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாநகராட்சிகளைத் தவிர, 109 நகராட்சிகள் மற்றும் 117 உள்ளாட்சி அமைப்புக்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளில் முக்கிய போட்டியாக காங்கிரஸ் மற்றும் முதன் முறையாக உள்ளாட்சி தேர்தலில் களம் காணும் மாநில எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி ஆகியவை போட்டியிட்டன.
வேளாண்சட்டங்கள் காரணமாக கூட்டணியை முறித்துக்கொண்ட சிரோமணி அகாலிதளம் மற்றும் பாஜக ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டது. மாநிலத்தில் மொத்தமுள்ள 2,302 வார்டுகளுக்கு மொத்தம் 9,222 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். சுவாரஸ்யமாக, அவர்களில் 2,847 பேர் சுயேச்சைகள். காங்கிரஸ் 2,037 வேட்பாளர்களை நிறுத்தியது, அகாலிதளத்திலிருந்து 1,569 பேர் போட்டியிட்டனர். பாஜக 1003 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 1606 இடங்களிலும் , பகுஜன் சமாஜ் கட்சி 160 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மாநிலத்தில் விவசாயிகளின் போராட்டங்கள் நடைபெற்று வருவதும், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் நடத்தப்படவுள்ளது.