கோவையில் வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான பூமி பூஜை, அவிநாசி சாலை கொடிசியா மைதானத்தில் இன்று நடைபெற்றது. பின்னர், தமிழக பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய எல்.முருகன்;- மேற்கு மண்டலம் பாஜகவின் கோட்டையாக இருக்கிறது. இங்கிருந்து அதிகமான சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமர்வார்கள். பிரதமரின் கோவை வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து தமிழகத்திற்கு பாஜக முக்கிய தலைவர்கள் வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு எங்களின் வாக்கு சதவீதத்தை பாதிக்காது. இந்த விலை உயர்வு தற்காலிகமானது. கூடிய விரைவில் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். மாநில அரசுகள் வரிகளைக் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். பூரண மதுவிலக்கு என்பது பாஜகவின் அடிப்படைக் கொள்கை. பூரண மதுவிலக்கு வேண்டும் என்றுதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். குறிப்பிட்ட சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயரிடப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார். தற்போது தேவேந்திர குல மக்களின் அங்கீகாரம் மீட்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாராயணசாமி மீது அதிருப்தி இருப்பதால் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்கின்றனர். கிரண்பேடி நீக்கம் குறித்தோ, புதுச்சேரி விஷயத்தைப் பற்றியோ நான் பேசுவது நன்றாக இருக்காது. ஊழல்களில் கரைப்படிந்த திமுக தான் எங்களுடைய பிரதான எதிரி. அதனால் அதை மையமாக வைத்தே எங்களது பிரச்சாரம் இருக்கும் என எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.