வேலூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை யொட்டி 'நறுவீ' மருத்துவமனை அமைந்துள்ளது. மொத்தம் 5 லட்சம் சதுரடி பரப்பளவில் 14 தளங்களுடன் சர்வதேச தரத்தில் அதி நவீன சிகிச்சை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை 500 படுக்கைவசதிகளை கொண்டது. 'நறுவீ'மருத்துவமனை திறப்பு விழாவுக்கு தமிழக வணிகவரி மற்றும்பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம்ஆகியோர் முன்னிலை வகித்தனர். 'நறுவீ' மருத்துவமனையை சென்னையில் இருந்தபடி முதல்வர் பழனிசாமி, காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் 'நறுவீ' மருத்துவமனையின் தலைவர் ஜி.வி.சம்பத் பேசும்போது ''இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், சிறந்த நிர்வாகம், தொழிலாளர் உறவு இருக்கும் மாநிலமாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாத மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது. இந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ள முதல்வருக்கு நன்றி'' என்றார்.
நிகழ்ச்சியில் ஏ.சி.சண்முகம் பேசும்போது, ''வேலூருக்கு மேலும் ஒரு மகுடமாக இந்த மருத்துவமனை வந்திருப்பது பெருமையாக இருக்கிறது. பல துறைகளில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இதில், முத்தாய்ப்பாக சுகாதாரத் துறை விளங்குகிறது. ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்ததுடன் 7.5சதவீதம் இட ஒதுக்கீடு மூலம் ஏழைமாணவர்களின் மருத்துவக் கனவை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். மருத்துவத் துறையில் இந்தியாவின் நுழைவு வாயிலாக தமிழகம் இருக்கிறது'' என்றார்.
முடிவில், 'நறுவீ' மருத்துவமனையின் துணைத் தலைவர் அனிதா சம்பத் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி மணிமாறன், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் அரவிந்தன் நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.