முதல்வரிடம் உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, அவிநாசி - அத்திகடவு திட்டத்தை போல ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தையும் உடனடியாக அறிவிப்பு செய்து திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அவிநாசி, சூலூர், சுல்தான்பேட்டை பகுதிகளில் விவசாய நிலங்களில் மேற்கொள்ள உள்ள சீப்காட் தொழிற்சாலையை ரத்து செய்ய வேண்டும். உயர்மின் கோபுரம், கெய்ல் பைப் லைன், ஐ.டி.பி.எல்.பைப் லைன் திட்டத்தை சாலையோரமாக அமல்படுத்த வேண்டும்.
மேலும் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிகபட்ச இழப்பீடும், மாத வாடகையும் வழங்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும், மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு வங்கி கடன் ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்து விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றிய தங்களது அரசுக்கும், தங்களுக்கும் விவசாயிகளின் சார்பிலும், உழவர் உழைப்பாளர் கட்சி சார்பிலும் என்னுடைய சார்பிலும் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), எஸ்.குணசேகரன்(திருப்பூர் தெற்கு) விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சித்துராஜ், நகர செயலாளர் ஏ.எம்.ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.