பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். இதற்கு அடுத்ததாக ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதன்பிறகு நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது பிரபாஸின் 21-வது படம். பிரபல நட்சத்திரம் தீபிகா படுகோனுடன் இணைந்து முதல்முறையாக நடிக்கவுள்ளார் பிரபாஸ். தீபிகா படுகோன் நடிக்கும் முதல் தெலுங்குப் படம் இது. இப்படத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார். கேஜிஎஃப். இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் இணைந்து சலார் என்கிற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.
இதுதவிர, தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடிக்கிறார் பிரபாஸ். ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது. இதன் படப்பிடிப்பு மும்பையில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஆதிபுருஷ், 2022 ஆகஸ்ட் 11-ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பை கோர்கான் ஸ்டூடியோவில் நடைபெற்ற ஆதிபுருஷ் படப்பிடிப்பின் முதல் நாளன்று மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. எனினும் இந்த தீ விபத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. பொருள் சேதம் மட்டும் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. முதல் நாள் படப்பிடிப்பில் தீ விபத்து ஏற்பட்டபோது பிரபாஸ், சயிப் அலி கான் ஆகிய இருவரும் படப்பிடிப்புத் தளத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.