மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசும் நீதிமன்றமும் முன்னெடுத்தால் அதனை வரவேற்போம் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” கடந்த ஆண்டை போலவே மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிது. இந்த காலகட்டத்தில் முன்களப்பணியாளர்களின் பணி பாராட்டத்தக்கது.
2 மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது பயனுள்ளதாக இருக்கும், அதற்காக அரசுக்கு நன்றி. ஆகஸ்ட் இறுதிக்குள் 45 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி தயாரிக்குப் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. அத்துடன் 7500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அதை கொண்டு போய் சேர்ப்பதில் தான் சிக்கல்கள் உள்ளது. இதனை புரிந்து கொள்ளாமல் சில அரசியல்வாதிகள் பேசுவது வருத்தமாக உள்ளது.
ஆக்சிஜனை கொண்டு போய் சேர்க்க ரயில், ராணுவ விமானங்களை பயன்படுத்துவது பாரட்டத்தக்கது. ஆக்சிஜனை கொண்டு போய் சேர்ப்பதில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசை குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க முன் வர வேண்டும். 24*7 சேவை மையம் துவங்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு தேவையான தகவல்களை வழங்கி உதவி வருகிறோம். மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசும் நீதிமன்றமும் முன்னெடுத்தால் வரவேற்போம்”, என்றார்.