இந்தியாவைச் சேர்ந்த குப்தா சகோதரர்கள், தென்னாப்பிரிக்க அரசு நிறுவனங்களிடம் இருந்து சட்ட விரோதமாக, 23 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றதாக, விசாரணை குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அஜய், அதுல், ராஜேஷ் குப்தா சகோதரர்கள், 1990ல் தென்னாப்பிரிக்காவில் குடியேறினர்.
சாட்சியம்
முதன் முதலாக, காலணி வியாபாரம் செய்ய துவங்கி, குறுகிய காலத்தில் சுரங்கம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் என, பல துறைகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்தினர். இதற்கு, தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா உடன், குப்தா சகோதரர்களுக்கு இருந்த நெருக்கம் தான் காரணம்.
தென்னாப்பிரிக்காவில் ஏராளமான அரசு நிறுவனங்கள், குப்தா சகோதரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. அரசு நிறுவனங்கள் மூலம், தங்கள் நிறுவனங்களுக்கு முறைகேடாக பணப் பரிமாற்றம் செய்ததாக, குப்தா சகோதரர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து தென்னாப்பிரிக்க அரசு அமைத்துஉள்ள விசாரணை குழுவில், லண்டனைச் சேர்ந்த பால் எட்வர்ட் ஹோல்டன் சாட்சியம் அளித்துள்ளார்.
நடவடிக்கை
அப்போது, தென்னாப்பிரிக்க அரசு நிறுவனங்கள் குப்தா சகோதரர்களின் நிறுவனங்களுக்கு, சட்ட விரோதமாக, 23 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கிஉள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை குப்தா சகோதரர்கள் மறுத்துள்ளனர். எனினும், அவர்கள் விசாரணைக்கு அஞ்சி, துபாயில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை நாடு கடத்த, தென்னாப்பிரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.