மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஏழாம் ஆண்டு நிறைவு விழாவை, மக்களுக்கு தொண்டாற்றும் தினமாக கொண்டாட வேண்டும். டாக்டர் எல் முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: பாரதிய ஜனதா கட்சி 2014ம் ஆண்டு முதல் 2019 வரையிலும், 2019 தொடங்கி வரும் 30ம் தேதியோடு ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. எனவே வருகிற 30-ஆம் தேதி தமிழகம் முழுவதும் இருக்கிற பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து அளவில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக்கூடியவர்கள் அனைவரும் மக்களுக்கு சேவை செய்கிற தினமாக இந்த நாளைக் கொண்டாட வேண்டும்.
தடுப்பு ஊசி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள், தடுப்பூசி போடுவதற்கு மக்களை தயார் செய்தல், கொரானா சிகிச்சைக்காக மக்களுக்கு தேவையான உதவிகள் என பல்வேறுவிதமான சேவைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பூத் அளவிலும் நடக்க வேண்டும். அத்துடன் ஒவ்வொரு நிர்வாகிகளும் குறிப்பிட்ட கிராமங்களை தேர்வு செய்து, அந்த ஒரு நாள் முழுவதும் அந்த கிராமத்திலிருந்து சேவைப் பணி ஆற்ற வேண்டும்.
கட்சியின் அணி, பிரிவு நிர்வாகிகள் அனைவரும் ரத்ததானம் முகாம் நடத்தி அவற்றை பொதுமக்களுக்கு சிகிச்சைக்காக பயன் பெறச் செய்ய வேண்டும். ரத்ததானம் முகாம் 30 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடத்தலாம். இதே காலகட்டத்தில் நாம் ஏற்கனவே செய்து வருகின்ற பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உணவு மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கும் உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். மேலும் மக்களுக்கு முகக் கவசங்கள், கபசுர குடிநீர் வழங்குவதும் தொடரவேண்டும்.
30ம் தேதி முழுவதும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சேவைப் பணிகளை செய்து, நமது ஏழாம் ஆண்டு நிறைவு நாளை சேவை தினமாகக் கொண்டாடி, மக்களுக்கு தொண்டாற்ற வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அதே வேளையில் தளர்வில்லா ஊரடங்கு தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து பாதுகாப்பாக சேவைப்பணிகளில் ஈடுபட வேண்டும்.