தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் பொறியியல் படிப்புகளை நடத்துவதற்கு கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ எனப்படும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, கன்னடம், மராத்தி மற்றும் வங்க மொழிகளில் 2020-21 ஆண்டு முதல் பொறியியல் பாடங்களை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஏஐசிடிஇ தலைவர் அனில் சாஸ்டிரபுத்தே கூறுகையில், தொழில்நுட்ப கல்வியை, மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிப்பதே நோக்கம். இதன் மூலம் அவர்கள் அந்த படிப்பின் அடிப்படையை எளிதாக புரிந்து கொள்ள முடியும். இது தொடர்பாக நாடு முழுவதும் இருந்து 500 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இளநிலை பட்டப்படிப்பை மேலும் 11 மொழிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம், கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்கள் பொறியியல் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது வரை அவர்கள், ஆங்கிலம் மொழி சரியாக தெரியாததால் பொறியியல் படிப்புகளில் சேர தயக்கம் காட்டி வந்தனர். ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், தங்கள் நாட்டு தாய்மொழியில் பாடங்களை நடத்தி வருகின்றன.