தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ம் தேதி முதல் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பலர் ஊரடங்கில் தேவையின்றி சுற்றி திரிந்ததாலும் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் மே 24-ம் தேதி முதல் தளர்வுகளின்றி ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமலுக்கு வந்தது.
இதனால் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை கடந்து வந்த நிலையில் தற்போது 33,764 ஆக குறைந்துள்ளது. அதே சமயம் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை மேலும் கட்டுக்குள் கொண்டுவர தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென பலர் வலியுறுத்தி உள்ளனர்.
கொரோன முதல் அலையை கட்டுப்படுத்த தவறியதே, 2-வது அலை தீவிரமாக தமிழகத்தில் பரவுவதற்கு காரணம் என்று தெரிவித்து இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று நேற்று செய்தியளார்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையியில் இன்று காலை 11 மணிக்கு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், டி.ஜி.பி, சுகாதாரத்துறை செயலாளர், வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த கூட்டத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.