சென்னையில் ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்று கைதானவர்களின் ஏ.டி.எம் கார்டில் இருந்து போலீசார் பணத்தை திருடியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கான தேவை அதிகரித்தது. பற்றாக்குறை எழுந்ததால், முக்கிய அரசு மருத்துவமனைகளில் மட்டும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ததால், மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக மருந்து தேவையான மருத்துவமனைகளுக்கே நேரடியாக அனுப்பப்படும் என அரசு அறிவித்தது.
இந்நிலையில் ரெம்டெசிவிரை கள்ள சந்தையில் விற்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இவ்வாறாக சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்றதாக கீழ்பாக்கம் மருத்துவமனை ஊழியர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர்களது ஏடிஎம் கார்டை வாங்கி 2 போலீசார் ரூ.1 லட்சம் வரை பணத்தை அவர்களிடம் இருந்து திருடியது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து எஸ்.ஐ உள்பட இரு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.