நாட்டில் இடர்பாடுகள் நேரும் போது தேசிய மாணவர் படையின் உதவி மிகப்பெரிய பலமாக இருந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வெள்ளம் உள்பட எந்தவகையான பேரிடராக இருந்தாலும் விரைவில் அந்த பாதிப்பிலிருந்து திரும்புவதற்கு தேசிய மாணவர் படையினர் பெரிதும் உதவியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தில்லி கரியப்பா மைதானத்தில் இன்று (ஜன.28) நடைபெற்ற தேசிய மாணவர் படை (என்சிசி) அணிவகுப்பு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இதில் பங்கேற்ற பிரதமர் மோடி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”நாட்டில் கரோனா பெருந்தொற்று அதிகமாக இருந்த காலத்தில் லட்சக் கணக்கான தேசிய மாணவர் படையினர் நிர்வாகத்துடன் சேர்ந்து பணியாற்றினர். சமூகத்திற்கான அவர்களின் பணி பாராட்டுக்குரியது.
தேசிய மாணவர் படையை விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய மாணவர் படையில் சேருபவர்களை ஊக்குவித்து எல்லை மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.
நாட்டின் எல்லை மற்றும் கடற்கரையோரமுள்ள 175 மாவட்டங்களில் தேசிய மாணவர் படையினர் முக்கிய பொறுப்பினை வகிப்பார்கள் என்று கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி கூறினேன். அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேசிய மாணவர் படையினருக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
The post நாட்டில் இடர்பாடுகள் நேரும் போது தேசிய மாணவர் படையின் உதவி மிகப்பெரியது… பிரதமர் நரேந்திர மோடி appeared first on தமிழ் செய்தி.