வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது, பேரணிக்கு அனுமதிக்கப்படாத இடத்தில், போலீஸ் தடுப்புகளை இடித்து தள்ளி செங்கோட்டை நோக்கி விவசாயிகள் பேரணி சென்றனர். அப்போது நடந்த வன்முறையால் பொதுச்சொத்துகள் சேதமடைந்தன. 400க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 44 எப்.ஐ.ஆர்.,கள் பதியப்பட்டு, 123 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், செங்கோட்டை நோக்கி விவசாயிகளை திருப்பி வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பஞ்சாப் நடிகர் தீப் சித்து மற்றும் விவசாய சங்க தலைவர்கள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். போலீஸ் தடுப்புகளை இடித்து தள்ளிய 14 டிராக்டர்கள் அடையாளம் காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 80க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தேடப்பட்டு வரும் நடிகர் தீப் சித்து, செங்கோட்டையில் மதக் கொடியை ஏற்றிய ஜக்ராஜ் சிங், குர்ஜாத் சிங், குர்ஜந்த் சிங் ஆகிய 4 பேரை கைது செய்வதற்கு துப்பு கொடுத்தால் தலா ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என டில்லி போலீஸ் அறிவித்துள்ளது. மேலும், ஜாஜ்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், இக்பால் சிங் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.