திருச்சிக்கு புதன்கிழமை வருகை தந்த விஜயபிரபாகரன் சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு கட்சியினருடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: தேமுதிக இதுவரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். மாற்றம் வேண்டும் என்று ஏற்றுக்கொண்டால் தேமுதிக தலைமையில் 3-ஆவது அணி அமையும். எம்ஜிஆர் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்ட நிலையிலும், தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற வரலாறு உள்ளது.
அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெறுவார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார். தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் அனைவருக்கும் முதல் தேர்தலாக இருக்கும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவருமே தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது.
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதி, கூட்டணி குறித்தெல்லாம் கட்சித் தலைமை முடிவு செய்யும். மக்களுக்கு நல்லது செய்பவர்களுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.