கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கரோனா தொற்று பாதிப்பிற்கு மத்தியில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் கட்சி அபார வெற்றி பெற்றது. அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ராணுவம் கூறி வந்தது.
இதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மியான்மர் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியுள்ளது. மேலும் நாட்டில் ஓராண்டிற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மியான்மர் ராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹ்லேங் ஆட்சிக் கவிழ்ப்பில் ராணுவம் ஈடுபட்டது தவிர்க்க முடியாதது எனக் கூறினார். தேர்தல் மோசடி புகாரின் அடிப்படையிலேயே ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர் இது சட்டத்திற்குட்பட்டது எனக் குறிப்பிட்டார்.