வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதன் ஒருபகுதியாக செங்கோட்டைக்குள் நுழைந்தவர்கள் மதக்கொடியை ஏற்றினர். இது பலத்த சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் புதன்கிழமை மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம்நபி ஆசாத், “செங்கோட்டையில் இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கக் கூடாது. இது ஜனநாயகத்திற்கும் சட்டம் ஒழுங்குக்கும் எதிரானது” எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்த சம்பவத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், அப்பாவி வேளாண் தலைவர்களை பொய்யான வழக்குகளில் சிக்க வைக்க எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது” என்று தெரிவித்தார்.
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று ஆசாத் அறிவுறுத்தியதுடன் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் உள்ளிட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தினார்.