சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த நிலையில் ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையானார். கொரோனா தொற்றிலிருந்து மீண்ட அவர் தற்போது பெங்களூரு புறநகர் பகுதியிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் ஓய்வில் இருக்கிறார். வரும் 8ம் தேதி காலை 9 மணிக்கு புறப்பட்டு அவர் சென்னை வர உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலுக்கு நேற்று மதியம் திடீரென அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. வந்தார். பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த;- சட்டப்பேரவை தேர்தலில் சசிகலா நிச்சயமாக போட்டியிடுவார். போட்டியிடும் பட்சத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்வார். மேலும், சசிகலா வாகனத்தில் கட்சி கொடி பயன்படுத்தும் விவகாரத்தில் டிஜிபியிடம் மட்டுமல்ல. முப்படை தளபதிகளிடம் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய இயலாது. குறிப்பாக திமுகவை ஆட்சிக்கு வர விடமாட்டோம். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவோம். அதிமுகவை ஜனநாயக வழியில் மீட்டெடுப்பதற்கான ஆயுதம்தான் அமமுக. அந்தப் பணியில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.