தமிழ்நாட்டில் பெரும்பாலும் இன்று வறண்ட வானிலையே நிலவும் என்றாலும் மேற்கு தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ள மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயிலைக் குளிர்விக்கும் விதமாகக் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. நேற்று கோவை, கன்னியாகுமரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்தது.
இந்நிலையில், இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் புதுவை உள்ளிட்ட மாநிலத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடலோர பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அதிகபட்சமாகக் கரூரில் 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 29 டிகிரி செஸ்சியசாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.